IPLபோட்டிகளை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் - முழு விவரம் இதோ!
சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் குறித்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி
சேப்பாக்கம் M.A சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்களில் மாலை 5 மணி முதல் 11 மணி வரையில் வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, வாகன நிறுத்தத்திற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதி அட்டை வாங்காத வாகனங்கள், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, நடைபயணமாக சென்று மைதானத்தை அடையலாம். வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது.
போக்குவரத்து
பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று கிரிக்கெட் மைதானத்தை அடையலாம். மேலும், விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை.
பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும். பாரதி சாலையிலிருந்து பெல்ஸ் சாலை செல்ல அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.
ரத்னா கஃபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.