தலைவர்களின் பிரச்சாரத்துக்காக போக்குவரத்தை தடை செய்யக்கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் கூட்டங்களுக்கு செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும், பொதுமக்கள் நடமாட்டம் தடுக்கப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம். ஞானசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவற்றில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மதுபானக்கடை, திரையரங்கம், மால் ஆகியவற்றில் மக்கள் கூடி வருவதாகவும், அதேபோல பிரச்சார கூட்டங்களிலும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காமல் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒன்று கூடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் போக்குவரத்தை தடுத்து நிறுத்தாமல் பிரச்சாரங்களை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
“பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்ட, கட்சி தலைவர்களின் பிரச்சாரங்களின்போது தடை செய்யக்கூடாது என்றும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரும்போதுதான் உரிய போக்குவரத்து தடைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், இதுதொடர்பாக காவல் துறை டிஜிபி மற்றும் காவல் துறை ஆணையர்களுக்கு தேர்தல் ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.