டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி குடும்பத்தை இன்று நேரில் சந்திக்கிறார் பிரியங்கா காந்தி
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில், டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியை போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடுக்க முயற்சி செய்தனர்.
இந்த வன்முறையில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வெடித்தது. பின்பு அது கலவரமாக மாறியது. அப்போது மத்திய டெல்லியின் மிண்டோ சாலையில் ஒரு டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. அதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் உ.பியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த நபர் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவரது இறப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் லாலன் குமார் தெரிவிக்கையில், ''காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ராம்பூருக்கு செல்கிறார்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது பலியான நவரீத் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார் என்றார்.