உணவகத்திற்குள் டிராக்டர் புகுந்து விபத்து - ஒருவர் பலி..!
சேலம் அருகே ஆத்துார் அருகே உணவகத்திற்குள் புகுந்து டிராக்டர் மோதியதில் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் புதுப்பேட்டையில் சரவணன் என்பவருக்கு சொந்தமான உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.
காலை வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் உணவருந்தி கொண்டிருந்த நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த மினி டிராக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததில் உணவகத்திற்குள் புகுந்தது.
உணவகத்திற்கு டிராக்டர் புகுந்ததில் ஆறுமுகம்,மருது ஆகியோர் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் மினி டிராக்டரை இயக்கியது 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆத்துார் பகுதியில் கற்கள்,மண் உள்ளிட்டவற்றை ஏற்றும் வேலைக்காக அதிகளவில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.