கோடை வெயிலுக்கு ஊட்டி, வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக அதிகரித்துள்ளது.
வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர்ச்சியான மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற இடங்களுக்கு அதிக அளவில் பயணம் செய்கிறார்கள்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரசு தாவரவியல் பூங்காவில் மக்கள் மலர்களை ரசித்து, குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
மேலும், ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், சிம்ஸ் பூங்கா போன்ற இடங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா தலங்களை சுற்றியுள்ள கடைகளில் வியாபாரமும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ஊட்டியில் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இன்னும் சில வாரங்களில் கோடை விழா தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் வால்பாறையிலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.