பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை - அமைச்சர் அறிவிப்பு.,!
தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த வாரம் ஒரு கிலோ நவீன் தக்காளி ரூ.45-க்கும் நாட்டு தக்காளி ரூ.38-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது.
சென்னையின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணகிரி,ராயக்கோட்டை,கர்நாடகா,மற்றும் ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து இருக்கும்.
சென்னையின் தினசரி தேவை 1000 டன்னாக இருந்து வரும் நிலையில் தற்போது தக்காளி வரத்து 500 டன்னாக குறைந்துள்ளது. இதனால் நாட்டு தக்காளி விலை கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை கடைகளிலும் தக்காளி விற்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.