‘தக்காளி காய்ச்சல்’ தக்காளியால் பரவுவது இல்லை - ராதாகிருஷ்ணன் விளக்கம்
கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 'தக்காளி காய்ச்சல்' எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் பரவல் குறித்து மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது -
தக்காளி காய்ச்சல் தக்காளியால் பரவுவது இல்லை. இந்த வகை காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வரும். இது ஒரு வகைக் காய்ச்சல்தான். இதனால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.