கேரளாவில் குழந்தைகளை குறி வைத்து தாக்கும் ‘தக்காளி வைரஸ்’- 85 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி - மக்கள் அச்சம்
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரேனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவதொடங்கியது.
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தனர். பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்டவற்றை அமல்படுத்தியது.
உலக நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தலைதுாக்க துவங்கி இருக்கிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 'தக்காளி காய்ச்சல்' எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இந்த தக்காளி காய்ச்சலால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.