முதல் பிறந்தநாளில் தங்க குவியல்: சர்ச்சையான கொண்டாட்டம்
தற்போது சூழலில் திருமணம், போட்டோஷூட், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு, பிறந்தநாள் என ஒவ்வொரு சந்தோஷமான தருணத்தையும் ஆடம்பரமாக கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமா என கேட்கத்தோன்றுகிறது உத்தரபிரதேசத்தில் நடந்த முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு.
உத்தரபிரதேசத்தின் அலிகாரில் முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார் ஷிவாய் என்ற குழந்தை, ஒரு வயதில் குழந்தைகள் நடை பழகுவார்கள் என்று பார்த்தால் ஷிவாயே லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியாக விட்டார்.
ஆம். முதல் பிறந்தநாளிலேயே குழந்தைக்கு தங்கம், வெள்ளி, நிலம் என விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள் குவிந்துவிட்டன.
ஷிவாயின் மாமாவான அகிலேஷ் சவுகான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ வைரலாக, கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
ஷிவாய்க்கு, அலிகார்- ஆக்ரா நெடுஞ்சாலையில் ஒரு நிலம் பரிசாகக் கொடுக்கப்பட்டது, இதுதவிர, 11 லட்சம் ரூபாய் ரொக்கம், 20 கிராம் தங்கச் சங்கிலி, அரை கிலோ கிராம் வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டன.
இதுமட்டுமா சிறுவனின் தாய்க்கும் 35 கிராம் தங்க நெக்லஸ் மற்றும் பல்வேறு நகைகள் பரிசாக வழங்கப்பட்டன.
வருகை தந்த உறவினர்களுக்கு பட்டுப்புடவைகள் வழங்கப்பட்டன. முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இவ்வளவு ஆடம்பரம் ஏன்? அந்த குழந்தைக்கு என்ன புரியப்போகிறது? என கமெண்டுகள் எழாமல் இல்லை.
