"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" - தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று
வருடம் தோறும் ஜனவரி மாதம் 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
பெண்கள் பல துறைகளில் சாதித்து சரித்திரம் படைத்து வந்தாலும் அவர்களுக்கு எதிரான அநீதிகளும் அரங்கேறி வருகிறது. பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் என்பது தினம் தோறும் செய்திகளாக வெளிவந்தே கொண்டிருக்கிறது.
வீட்டில் இருந்து கல்வி நிலையங்களுக்கோ அல்லது பணிகளுக்கு செல்லும் தங்களது பெண் பிள்ளைகள் திரும்பி வரும் வரை பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருந்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் பல தடைகளையும் தாண்டி பல சரித்திர சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள். நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு என்பது இன்றியமையாதா ஒன்றாக இருந்து வருகிறது.
குற்றங்களை தடுக்க தீவிரம் காட்டு மத்திய, மாநில அரசுகள்
பெண்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தியும் அதை நடைமுறையில் செயல்படுத்தியும் வருகிறது.
இதனிடையே அரசு குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் சட்டத்தை இயற்றி அதை செயல்படுத்தி வருகிறது.
அறியாத வயதில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் உறவினர்களுக்கும் குழந்தை திருமண தடை சட்டம் தண்டனை வழங்குகிறது.
அதே போன்று 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்பவர்கள் மீது போக்சோ சட்டத்தின் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று
பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளையும் குற்றங்களை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் தினம் தோறும் அரங்கேறி கொண்டு இருப்பது தான் வேதனையின் உச்சம்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்களை தடுப்பதற்காக 2008 ஆம் ஆண்டு இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஜனவரி 24ம் தேதியை தேசிய பெண்கள் குழந்தைகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பெண்மையை போற்றும் வகையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற கூற்றுக்கு ஏற்ப மங்கையரை போற்றுவதில் பெருமையடைகிறோம்.