இன்று நாகை மாவட்டம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் துார்வாரும் பணியை ஆய்வு செய்வதற்காக இன்று நாகை செல்கிறார்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை,திருவாரூர்,மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்ளில் குறுவை சாகுபடிக்காக ஆறுகள்,வடிகால்கள்,வாய்க்கால்கள் துார்வாரும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது இந்த பணிகள் எல்லாம் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி செல்கிறார்.
திருச்சி செல்லும் அவர் சாலை மார்க்கமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு காரில் செல்கிறார். நாளை காலை 9 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் அவர் நாகை மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார்.
பின்னர் அவர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு தஞ்சை மாவட்டத்துக்கு செல்லும் அவர், அம்மாப்பேட்டை அருகே கொக்கேரி கிராமத்தில் பிமனோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன்பின் அங்கிருந்து புறப்படும் அவர்,மாலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை சென்றடைகிறார்.
அங்கு செய்தியாளர்களை சந்திக்கும் அவர் பின்னர் சென்னை திரும்புகிறார்.