குரூப்-3, 4 பதவிகளுக்கு தமிழ் மொழித் தகுதித்தாள் பாடத்திட்டம் வெளியீடு
குரூப்-3, குரூப்-4 பதவிகளுக்கு தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 உள்பட அனைத்து விதமான போட்டித் தேர்வுகளிலும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம் என்ற நடைமுறைக்கான புதிய பாடத்திட்டங்கள், மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
அதன்படி சமீபத்தில் குரூப்-1, 2 மற்றும் 2ஏ உள்பட சில பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது குரூப்-3, 4, 7-பி, 8 போன்ற பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி தகுதித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அதற்கடுத்த ‘பி’ பிரிவில் எழுதிய விடைத்தாள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் தேர்வர்கள் அந்த பாடத்திட்டத்தை பார்த்து வருகிற மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ள குரூப்-4 பதவிகளுக்கான தேர்வை எதிர்கொள்ள தயாராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.