TNPSC தேர்வில் புதிய விதிகள் அறிமுகம்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு 35க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கரோனோ காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறாத நிலையில், புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது, தமிழ்நாடு அரசுத் துறை, மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதனை செயல்படுத்தும் விதமாக அனைத்து தேர்வுகளிலும் தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழித்தாள் தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக 45 நிர்ணயிக்கப்பட உள்ளது.
மேலும், அரசுப் பணிகளில் கொரோனா தொற்றின் காரணமாக 2 ஆண்டுகள் தளர்வு வழங்கி ஏற்கெனவே அரசு அனுமதி அளித்துள்ளது.
வன்னியருக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டிற்கு அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கி உள்ளது.
பெண்களுக்கான நியமனங்களில் 40 விழுக்காடு ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசின் உத்தரவு பெறப்பட வேண்டும்.
இதற்கான அனுமதிகள் பெறப்பட்டவுடன், அக்டோபர் மாதம் துறைவாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் பட்டியலுடன், அறிவிப்புகளும், தேர்வு நடைபெறும் தேதியும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.