தமிழ்நாட்டின் மாபெரும் கிரிக்கெட் தொடர் தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்
தமிழக வீரர்களின் கிரிக்கெட் திறமைகளை வெளிக்கொணரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட இந்த தொடர் இந்தாண்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மட்டும் ஜூலை 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்சை சந்திக்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.