கிராம சபை கூட்டத்தில் லஞ்சப் புகார் தெரிவித்த இளைஞர் - மைக் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டதாக புகார்
சிறப்பு கிராம சபை கூட்டத்தில் லஞ்சப் புகார் தெரிவித்தவரிடம் இருந்து மைக் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கிளியனூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, அவரது கணவரும் குத்தாலம் திமுக ஒன்றிய செயலாளருமான மங்கை சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பதிலளிக்கும் முன்பே எவ்வித அரசுப் பொறுப்பிலும் இல்லாத திமுக ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மைக் மூலம் பதிலளித்தார்.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகத்தில் புது ரேஷன் அட்டை வாங்குவதற்கு 1,200 ரூபாய் லஞ்சம் கேட்பதாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் தமிழ் பாண்டியன் என்பவர் புகாராக தெரிவித்தார்.

அவரை மங்கை சங்கர் தடுத்த நிலையில் கேட்காமல் பேச்சை தொடர்ந்தார். இடைமறித்து பேச்சை நிறுத்த சொன்ன பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மைக்கில் பொதுவெளியில் இப்படி பேச கூடாது, புகார் தெரிவிப்பதற்காக கூட்டம் அல்ல.
உங்கள் குறைகளை மனுவாக எழுதி தாருங்கள் விசாரிக்கிறோம் என்று பேசினார். இதனையடுத்து அந்த இளைஞரிடம் இருந்து மைக் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டது. பொதுமக்கள் குறைகளை கேட்பதற்காக உள்ள கிராம சபை கூட்டம் திமுக அரசின் புகழ் பாடுவதற்கு மட்டுமே பயன்பட்டதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.