டெட் தேர்வில் தந்தை, மகன் இருவரும் தேர்ச்சி.., யார் அதிக மதிப்பெண்கள் தெரியுமா?
தமிழகம் முழுவதும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு (TN TET) நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
ஆசிரியராக படித்தவர்கள் மட்டுமின்றி, அரசு பணியில் உள்ள ஆசிரியர்களும் இந்தாண்டு தேர்வை எழுதினர்.
இதற்கிடையில், தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஜனவரி 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டார்.
அதன்படி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 75 மதிப்பெண்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 60 மதிப்பெண்களும் போதுமானதாக மாற்றப்பட்டது.
இந்த புதிய மதிப்பெண் அடிப்படையில் ஜனவரி 30ஆம் தேதி முடிவுகள் வெளியானது.

இதில் நாகை மாவட்டம் வேதாரணயம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த பூங்குன்றன் (55) மற்றும் அவரது மகன் ராகுல் (27) இருவரும் டெட் தேர்வில் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பூங்குன்றன் கீழ்வேளூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அவர் 42 வயதில் டெட் முதல் தாளில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக சேர்ந்தவர். அவரது மகன் ராகுல் பி.இ மற்றும் பி.எட் முடித்துள்ளார்.
இந்நிலையில், இருவரும் சேர்ந்து எழுதிய டெட் தேர்வில் தந்தை பூங்குன்றன் 85 மதிப்பெண்களும், மகன் ராகுல் 86 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தந்தை மகன் இருவரும் கல்வித் துறையில் ஒரே நேரத்தில் வெற்றி பெற்றது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.