தில்லாக காவல் நிலையத்திலேயே ரீல்ஸ் செய்த பொடுசுகள் ; வைரலான வீடியோவால் ஏற்பட்ட திருப்பம்
பொள்ளாச்சி காவல்நிலையத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்த சிறுவர்களை போலீஸார் அறிவுரை செய்து அனுப்பி வைத்தனர்.
பொள்ளாச்சியில் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வருவதுபோல் சினிமா பாணியில் இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்டதால் அது பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும் இரண்டு சிறுவர்கள்,
“நீங்க இங்க எப்படியோ எங்க ஊர்ல நாங்க.. தெரியல்லன்னா இரண்டு பேருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க” என்ற சினிமா பட வசனத்துடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலானதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரித்து வந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமதாஸ் மற்றும் உதவி ஆய்வாளர் திருமலைசாமி இருவரும் அந்த சிறுவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று பெற்றோர்கள் முன்னிலையில் அறிவுரை வழங்கி விட்டு வந்தனர்.
மேலும் இருவரும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட மாட்டோம் சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்கும் வகையில் நடந்து கொள்வோம் என்று மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவி வருகிறது.