அதிக கட்டணம் செலுத்தி உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர்கள்
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில் ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புதின் நேற்று அதிகாலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பை புதின் தொலைக்காட்சியில் உரையாடியபோது தெரிவித்தார். அவர் பேசிய சிறிது நேரத்திலேயே உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கின.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், டோனஸ்க் , மைக்கோல், மரியூபோல் மற்றும் கிழக்கு உக்ரைனின் நகரங்களில் ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்தது மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனகங்களை தெரிவித்திருந்தனர்.
மேலும் உடனடியாக தாக்குதலை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர். எதையும் பொருட்படுத்தாத ரஷ்யா இரண்டாவது நாளான இன்றும் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் எப்படியாவது தாய் நாடு திரும்பிவிட வேண்டும் என மரணத்தின் விலும்பில் காத்திருக்கின்றனர்.
அவர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த சில மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தாயகம் திரும்பியுள்ளனர்.
திருவில்லிபுத்தூர், மம்சாபுரத்தை சேர்ந்த விஷ்வா உக்ரைனில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக கடந்த 18-ம் தேதி இந்தியா செல்ல விரும்பும் மாணவர்கள் செல்லலாம் என இந்திய தூதரகம் அறிவித்தது.
இதனை அடுத்து விஷ்வாவுடன் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 9 பேரில் 6 பேர் உக்ரைனில் இருந்து கிளம்பியுள்ளனர்.
கடந்த 18-ம் தேதி கிளம்பிய இவர்கள் ஏர் அரேபியா விமானம் மூலம் சார்ஜா வந்தடைந்து, பின்னர் அங்கிருந்து கனெக்ஷன் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்ததாக மாணவர் விஷ்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாணவர் விஷ்வா கூறுகையில், ‘‘பொதுவாக இந்தியாவிற்கு வந்து திரும்ப விமான கட்டணம் 42 ஆயிரம் ரூபாய் தான்.
ஆனால், உக்ரைனில் போர் காரணமாக, இந்தியாவிற்கு விமானத்தில் வருவதற்கு மட்டும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார்கள்.
நான், என்னுடன் படிக்கும் வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறு மாணவர்கள், கூடுதலாக பணம் கொடுத்து தாயகம் வந்து விட்டோம்’’ என்றார்.