தமிழக அரசு தேவையில்லாத தொல்லையை தருகிறது...சித்தராமையா விளாசல்
மேகதாது அணை காட்டுவது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லையை தருவதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம்
தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் காவிரி நீர் விவகாரத்தில் தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை என குற்றம்சாட்டி தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இதன் காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில், தமிழகத்திற்கு ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12 வரை 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.இதே உத்தரவை தான் உச்ச நீதிமன்றமும் பிறப்பித்திருந்தது.
ஆனால் இதனை பின்பற்றாத கர்நாடக அரசு கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 3000 கன அடி நீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியதாக கர்நாடக அரசு மீது புகார் அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
தேவையில்லாத தொல்லை
இதற்கிடையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தங்களின் பகுதியில்தான் தாங்கள் அணைக்கட்டுவதாகவும், இந்த திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டி இறக்கின்றார். மத்தியில் ஆளும் பாஜக அரசும், மேகதாது அணைக்கட்ட அனுமதி வழங்காமல் தாமதம் செய்வதாகவும் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் இந்த கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.