கல்விக்கடனை தள்ளுபடி செய்த தமிழக அரசு - யாருக்கெல்லாம் தெரியுமா?
ரூ.48.95 கோடி கல்விக்கடனை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கல்விக்கடன் தள்ளுபடி
2021 ஆம் சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் 30 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ரூ.48.95 கோடி கல்விக்கடனை தள்ளுபடி செய்வதாக இன்று(03.02.2025) அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
யாருக்கெல்லாம் தள்ளுபடி?
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், "ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் பெறப்பட்ட கல்வி கடனும்
2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது.