மகளிர்க்கு 'தாயுமானவராகத்' தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மகளிர்க்குத் 'தாயுமானவராகத்' தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும் என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
திமுக அரசு அளித்த முக்கிய வாக்குறுதியான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை இன்று நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். திராவிட கழகங்களின் முதன்மை தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் துவங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தமாக 1 கோடியே 6 லட்சம் பேர் பயன் பெறவுள்ளனர். இந்த திட்டத்திற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், திராவிட கழகத்தின் முதன்மை திட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி உரிய வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் முதல் தேதிகளில் சம்பள பரிவர்த்தனை நடைபெறும் பெரும் காரணங்களால் 15-ஆம் தேதி பணம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் இது தொடர்பான பதிவு ஒன்றை முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மு.க. ஸ்டாலின் அதில் " நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களைச் செயல்படுத்தி திராவிட மாடலில் தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்தி வருகிறோம்.
காலை உணவுத் திட்டம் மாணவர்களின் வருகையை உயர்த்தி, கற்றல் திறனை மேம்படுத்துகிறது. இப்போது கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தால் உழைக்கும் மகளிரின் சிரமத்தைச் சற்று போக்கியிருக்கிறோம்.
தாயாகக் கருணையையும் - மனைவியாக உறுதுணையையும் - மகளாகப் பேரன்பையும் பொழியும் மகளிர்க்குத் 'தாயுமானவராகத்' தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்" என்று மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.