வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு - முதல்வர் அறிவிப்பு
பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.மற்றொரு வீரரான சரத்குமார் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதனிடையே மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு நடந்துமுடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன். தங்கம் வென்றிருந்தார்.
பாராலிம்பிக்கில் அடுத்தமுறை நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என உறுதியளித்திருக்கும் மாரியப்பன் மேலும் தனக்கு அரசு வேலை வழங்கவேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாரியப்பன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்நிலையில் அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைக் கொள்கிறது.
அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவரது சாதனைப்பயணம் தொடரவும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் @189thangavelu-வின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது.
— M.K.Stalin (@mkstalin) August 31, 2021
சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்! pic.twitter.com/oDREUI9Efa