சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை முழு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி நிறைவடைந்தது.
இந்த கூட்டத்தொடரில் 2026- 27ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தனியார் பல்கலைகழக திருத்த மசோதா, விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணிகள்) திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ஆம் சட்ட திருத்த மசோதா, வணிக எளிதாக்கல் திருத்த மசோதா, மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தனியார் பல்கலைகழக திருத்த மசோதா தவிர்த்து மற்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கூட்டத்தொடர் நிறைவடைந்த 5 நாட்களுக்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதனால் இவை சட்டமான நிலையில் கடந்த 15ம் தேதி வெளியான தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.