பி.எஸ்.பி.பி சர்ச்சை எதிரொலி: ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிகள் வகுத்து தமிழக அரசு உத்தரவு
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இணையவகுப்பில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி தரக்குறைவாக நடந்து கொண்ட நிலையில் தற்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் மற்றும் பல ஆசிரியர்களிடம் தொடர் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இணையவழியில் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் அதனை பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு விடீயோக்களை அவ்வப்போது பெற்றோர் ஆசியர் சங்கத்தின் மூலமாக கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இணைய வகுப்புகளில் ஆசிரியர்கள் கண்ணியம் தவறும் வகையில் நடந்துகொள்ளும் பட்சத்தில் அவர்களின் மீது கட்டாயம் போக்ஸோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மாணவ - மணாவிகள் புகார்கள் அளிக்கும் வகையில் சிறப்பு இலவச உதவி எண்கள் விரைவில் உருவாக்கி, அது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.