ப்ளீஸ்.. உதவி பண்ணுங்க! சேலம் சிறுமியை நேரில் சந்தித்த ஸ்டாலின்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் சிறுமி ஜனனியை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ராஜ நந்தினி. இந்த தம்பதிக்கு ஜனனி (14) என்ற மகள் உள்ளார்.
10ஆம் வகுப்பு படித்து வரும் ஜனனி, சிலம்பம், ஸ்கேட்டிங், வில்வித்தை போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார்.
இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி ஜனனியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போவதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் ஜனனிக்கு சிசிக்சை வழங்கப்பட்டு வந்தது, மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு ஜனனியின் தாய் தலைமை செயலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அத்துடன், தாய் ராஜ நந்தினி, சிறுமி ஜனனி ஆகியோர் தங்களுக்கு உதவி செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை பதிவிட்டனர்.
இது சம்பந்தமாக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் பேசிய ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறியதுடன் கண்டிப்பாக உதவி செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.
தொடர்ந்து, சென்னை அழைத்து வரப்பட்ட சிறுமி ஜனனிக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் சிறுமி ஜனனியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் சிறுமிக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், சிறுமிக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.