எதிர்க்கட்சி தலைவர் யார் ? - பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று கூடும் சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6 ம் தேதி முதல் மே 10 ம் தேது வரை நடந்து முடிந்தது.
இன்று சட்டப்பேரவை
கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டம் தேதி குறிப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
6 மாதத்திற்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்ட வேண்டும் என்ற விதிகளின்படி, அடுத்த மாதம் நவம்பர் 10 ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இன்றைய நாளில் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.
தொடர்ந்து, பேரவைத்தலைவர் மு. அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, பேரவை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
யார் எதிர்கட்சி தலைவர்
குறிப்பாக, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்துள்ளார்.
எனவே, அவருக்கே இருக்கை ஒதுக்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இப்போது எதுவும் முடிவு எடுக்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார்.
எனவே, இந்த விஷயத்தில் சபாநாயகர் மு.அப்பாவு என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பது இன்று தெரிந்துவிடும்.