சட்ட சபையில் கல கல .. அந்த வைகுண்டத்திற்கு பாதை அமைக்க கிருஷ்ணரிடம் அனுமதி வாங்கியாச்சா? ஓபிஎஸ் பேச்சுக்கு சிரித்த அப்பாவு

2022 tnassembly opsspeech
By Irumporai Jan 06, 2022 06:35 AM GMT
Report

2022-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரம் நடந்தது. அதன்படி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சரும், அமைச்சர்களும் பதிலளித்தனர்.

இந்த நிகழ்வானது முதல்முறையாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நேரலை ஒளிபரப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “சேலம் கோழிக்கால் நத்தம் வடுகப்பட்டி வழியாக வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என உறுப்பினர்கள் கேள்வி கேட்டு அமைச்சர்கள் பதில் அளித்திருக்கின்றனர்.

முதலில் வைகுண்டத்திற்கு சாலை அமைக்க வேண்டுமென்றால் கிருஷ்ண பரமாத்மாவிடம் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி பெற்றாகிவிட்டதா என்பதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும்” என்றார். ஓபிஎஸ்ஸின் இந்தப் பேச்சுக்கு சபாநாயகர் அப்பாவு சிரித்தார்.

இதனையடுத்து பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, “மக்களின் தேவை அறிந்து 17,000 கோடி ரூபாய்க்கு சாலை பணிகள் நடந்துவருகின்றன. ஆன்மீகத்தில் திளைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் வைகுண்டத்திற்கு அனுமதிக்கப்படுமா என கேட்கிறார்.

இந்த ஆட்சியைப் பொறுத்தவரை அமைச்சர் சேகர்பாபு மூலம் 5.30 மணிக்கே வைகுண்டத்திற்கு வழிகாட்டும் வகையில் அறநிலையத் துறை சார்பாக பல பணிகள் செய்யப்படுகின்றன.

எப்போது இல்லாத அளவுக்கு ஆன்மீக மக்களுக்கான பணிகள் இந்த ஆட்சியில் நடந்துவருகிறது. சிவலோகத்திற்கும் சரி, வைகுண்டத்திற்கும் சரி வழிகாட்டும் பணியில் சேகர் பாபு ஈடுபட்டிருக்கிறார்” என்றார்.