தமிழகத்தின் இன்று பேருந்துகள் இயங்குமா? - வெளியான அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 60 சதவீத பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தொ.மு.ச பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும், இன்றும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC போன்ற முக்கிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உட்பட 11 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதால் நேற்று மாநிலம் முழுவதும் பேருந்து சேவை முற்றிலும் முடங்கியது. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் சம்பளத்தை இழந்தாலும் பரவாயில்லை. கட்டாயம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கங்கள் அறிவித்து போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதனால் சென்னையில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர், வேலைக்கு செல்வோர், வெளியூர் பயணம் மேற்கொள்வோர் போன்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே இன்றும் வேலை நிறுத்தம் தொடரும் என்பதால், போதிய அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு , பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி இன்று 60 சதவீத பேருந்துகளை முடிவு செய்யப்பட்டுள்ளது என தொ.மு.ச பொருளாளர் நடாராஜன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.