வன்முறையை தூண்டக்கூடிய சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - எம்எல்ஏ அப்துல் சமது
தமிழகத்தில் வன்முறையை தூண்டக்கூடிய சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான அப்துல் சமது தெரிவித்துள்ளார்.
இரத்ததான முகாம்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் பிரண்ட்ஸ் பிளட் பேங்க் இணைந்து 28-வது ஆண்டாக திருச்சி பாலக்கரை அர்ரய்யான் மர்க்கஸ் அரங்கில் இரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் சிறப்பு முகாம் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது கலந்துகொண்டு இரத்த தான முகாமை துவக்கி வைத்தார்.
இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்திய சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் போராட்டம் நடத்தி இன்னுயிர் ஈந்து பல கோடி பொருளாதாரத்தை இழந்து நோக்கத்திற்காக இந்த விடுதலையை பெற்று தந்தார்களோ அந்த நோக்கத்தை பாதுகாப்போம்,
இந்த நாட்டை பன்முக தேசமாக, வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட தேசமாக, மதசார்பற்ற தேசமாக, மத நல்லிணக்க தேசமாக மாற்ற நாம் அனைவரும் இந்த பவள விழா சுதந்திர தினத்தில் உறுதிமொழி ஏற்போம்.
குறிப்பாக தமிழகத்தின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும்பொழுது அவர் மீது காலணியை வீசிய சாம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்காக வன்முறையை கையில் எடுத்து இருக்கிறது. மதுரையோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு இது போன்ற வன்முறையை தூண்டக்கூடிய சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.