சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய தலைநகரம் - திருவாரூரின் அருமையும் பெருமையும்!
திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் ஐந்து பராம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது.
திருவாரூர்
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படுகிறது. காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் இம்மாவட்டம், நெல் வயல் வெளிகளினாலும், உயர்ந்த தென்னை மரங்களினாலும், பசுமையான தாவரங்களினாலும் செழிப்புடன் திகழ்கிறது.
7, 8-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சைவக்குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இயற்றிய தேவாரத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பாடல்பெற்ற தலமாக திருவாரூர் அமைந்துள்ளது. மார்கழி ஆதிரை விழா, பங்குனி உத்திரப்பெருநாள், வீதிவிடங்கனுக்கு நீதி செய்த முறை ஆகியவற்றை இப்பாடல்களின் மூலம் அறியலாம்.
வரலாறு
முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில் திருவாரூர் தலைநகரமாகவும், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்துள்ளது. 13ஆம் நூற்றாண்டில், இரண்டாம் இராஜேந்திரசோழர் காலத்தில், சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாண்டியர்கள் மற்றும் ஹோய்சாலர்கள் ஆதிக்கத்தில் இம்மாவட்டம் இருந்துள்ளது.
மராத்தியரின் ஆட்சிக்காலத்தில் சிதம்பரம் நடராஜரின் தற்காலிக வீடாகவே திருவாரூர் இருந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக 1991 வரையிலும், பின்னர் 1997க்குப் பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது.
ஆழித் தேர்
வரலாற்று ரீதியாக திருவாரூர் சமயம், கலை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்தவர்களின் மையமாகத் திகழ்ந்தது. திருவீழிமிழலை, திருப்பாம்புரம், திருமீயச்சூர், திருவாஞ்சியம், தில்லைவிளாகம், திருக்கண்ணமங்கை போன்ற வரலாற்றில் பிரபலமான கோவில்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.
முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடையில் பழமையும், புகழும் மிக்க தர்கா அமைந்துள்ளது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என புகழ்ந்து போற்றக் கூடியது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின் தேர் தான். இதற்கு ஆழித் தேர் என்று பெயர்.
பாரம்பரியம்
திருவாரூர் தேரழகு என்பார்கள். அந்த அளவிற்கு சிறப்பு பெற்ற இந்த தேரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சிறப்புகளையும், ஆச்சரியங்களையும் கொண்டது. தற்போதுள்ள தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 300 டன் எடையும் கொண்ட எண்கோண வடிவத்தில் ஆனது. முற்றிலுமாக அலங்கரிக்கப்பட்ட பிறகு இதன் எடை 400 டன்னாக இருக்கும்.
இப்பகுதியில் தோன்றிய பாரம்பரிய நடன வடிவமான பரதநாட்டியத்திற்கு இந்த மாவட்டம் பிரபலமானது. இங்கு வேளாண்மைத் தொழில் முதன்மைத் தொழிலாக உள்ளது. 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். இம்மாவட்டத்தின் முதன்மைச் சாகுபடிப் பயிர் நெற்பயிராகும். இப்பகுதியில் ஒரு செழிப்பான ஜவுளித் தொழிலும் உள்ளது.
சுற்றுலா
சமீபத்திய ஆண்டுகளில், மாவட்டம் சுற்றுலாத் துறையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது, அதன் கலாச்சார மற்றும் வரலாற்று தளங்களை ஆராய்வதற்காக இப்பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வளமான கலாச்சார பாரம்பரியம், அழகான கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகளுக்கு பெயர் பெற்றது.
வடுவூர் பறவையகம், உதயமார்த்தாண்டபுரம் பறவையகம், முத்துப்பேட்டை சதுப்பு நில காடுகள் எனக் கூறிக்கொண்டே போகலாம். திருவாரூர் மாவட்டத்தில் பல அழகிய கடற்கரைகள் உள்ளன, இது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பிரபலமானது. துடிப்பான திருவிழாக்களுக்கும் பெயர் போனது.
திருவிழாக்கள்
பொங்கல் பண்டிகை, ஆருத்ரா தரிசன விழா, கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தின் வளமான வரலாறு, துடிப்பான கலாச்சாரம் மற்றும் பலவகையான உணவு வகைகள், ஆராய்வதற்கும் கண்டுபிடிப்பதற்கும் ஒரு கண்கவர் இடமாக அமைகிறது.