சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
காங்கேயம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேதனை
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டம். காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் திருமதி.சரோஜா. க/பெ. நாச்சிமுத்து (வயது50), திருமதி.பூங்கொடி க/பெ. கோவிந்தராஜன் (வயது48). திரு.கிட்டுசாமி, த/பெ.நாச்சி (வயது45) மற்றும் செல்வி தமிழரசி த/பெ.குணசேகரன் (வயது 17) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன். செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களை உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அனுப்பி வைத்துள்ளேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.பழனி, த/பெ.குமரன் (வயது 50), திருமதி வளர்மதி, க/பெ.சுதாகரன்(வயது 26), திருமதி இந்துமதி, க/பெ.குணசேகரன் (வயது 23) மற்றும் செல்வி காயத்ரி, த/பெ.சரவணன் (வயது 12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
திருப்பூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/LFHWomb1q2
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 26, 2023