மாட்டிறைச்சி விற்கக் கூடாது..வட்டாச்சியரின் அடாவடி..விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்!
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மாட்டிறைச்சி விற்கக் கூடாது என வட்டாச்சியர் ஒருவரை எச்சரிக்கும் வீடியோ சமூக வளைத்தலங்களில் வேகமாக பரவியது.இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவிநாசி அருகே கானாங்குளம் பகுதியில், மாட்டிறைச்சி கடை உரிமையாளர் வேலுச்சாமி வீட்டில் அவிநாசி வட்டாட்சியர் சுப்பிரமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேலுச்சாமியை இனி மாட்டிறைச்சி விற்கக் கூடாது என சுப்பிரமணி எச்சரித்தார். மாட்டிறைச்சி விற்கக் கூடாது என சட்டம் உள்ளதா என கேட்டு வேலுச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வளைத்தலங்களில் வெளியானது.
இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த வட்டாசியர் சுப்பிரமணி பழங்கரை முதல் நம்பியூர் வரை செல்லும் சாலையில் மாட்டிறைச்சிக் கடைகள் சுகாதாரமின்றி உள்ளதாகவும்,
சாலை ஓரத்திலேயே மாடுகள் வதை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்ததாலேயே நேரில் சென்று எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். இதனிடையே வட்டாட்சியரின் நடவடிக்கை குறித்து விமர்சனம் எழுந்த நிலையில்
இதற்கு பதிலளித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.