திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4 கோடி உண்டியல் வருமானம் - கோவில் அதிகாரிகள் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அப்படி வரும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்துகிறார்கள். அதே போல் வேண்டுதலை நிறைவேற்றவும் தங்களது முடியை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதித்திருந்த நிலையில்,
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உண்டியல் வருமானமும் தற்போது அதிகரித்துள்ளது.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 61,224 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
33, 930 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒரு நாள் மட்டும் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 2 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.