திருப்பதியில் 6 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது!
திருப்பதியில் மலைப்பாதையில் 6 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது.
சிறுத்தை தாக்குதல்
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டி பாலத்தை சேர்ந்தவர்கள் தினேஷ் குமார் அவரது மனைவி சசிகலா மற்றும் இவர்களது மகள் லக்ஷிதா(6). இவர்கள் நேற்று முன்தினம் திருப்பதிக்கு வந்திருந்தனர். பின்னர் இரவு நேரத்தில் இவர்கள் அலிபிரி மலைப்பாதையில் நடந்து சென்றுள்ளனர்.
பெற்றோரை தாண்டி மகள் லக்ஷிதா சில படிகள் முன்னே நடந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுமியை தாக்கி இழுத்து புதருக்குள் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுமியை எங்கு தேடியும் கிடைக்க வில்லை.
அடுத்த நாள் காலை மேற்கொண்ட தேடுதலில் நரசிம்ம சாமி கோவிலுக்கு அருகில் சில அடி தூரத்தில் இறந்த நிலையில் சிறுமியின் உடல் கிடந்துள்ளது . இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோரிடமும், பக்தர்களிடமும், அந்த பகுதி மக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் பக்தர்கள் பெரும் அச்சமும் அடைந்தனர்.
சிறுத்தை சிக்கியது
இந்நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே 3 கூண்டுகளையும் அமைத்தனர். இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.