திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி பரிதாப பலி - பக்தர்கள் அச்சம்!
சிறுத்தை தாக்குதல்
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்த குடும்பம் திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளனர். இவர்கள் இரவு 8 மணி அளவில் அலிபிரி ஸ்ரீ வாரி மெட்டு மலைப்பாதையில் மலைப்பாதையில் திருமலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் மகள் லக்ஷிதா (6) மட்டும் பெற்றோரை தாண்டி சில படிகள் முன்னால் நடந்து சென்றிருக்கிறார். சிறுமி நரசிம்மர் கோவில் அருகே நடந்து கொண்டிருந்த போது திடீரென வந்த சிறுத்தை ஒன்று சிறுமியை அடித்து இழுத்துக்கொண்டு புதருக்குள் சென்றுள்ளது. இதைப் பார்த்த பெற்றோர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
இதனை தெரிடந்த்துக்கொண்ட சக பக்தர்களும் சிறுத்தையை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதுகுறித்து திருப்பதி வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இரவு முழுவதும் வனத்துறை தேடுதல் மேற்கொண்டும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறுமி பலி
இந்நிலையில் இன்று காலை மீண்டும் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது நரசிம்மர் கோவிலுக்கு சிறிது தூரத்தில் இறந்த நிலையில் லக்ஷிதாவின் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் உடல் பாதிதான் உள்ளது, மீதி உடல் சிறுத்தை உட்கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.