அலை மோதும் பக்தர்கள் கூட்டம்... 8 கி.மீ தூர வரிசை : நெரிசலில் சிக்கி தவிக்கும் திருப்பதி
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் 8 கி.மீ தூரம் வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் பொதுக்கூட்டம்
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதி மலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் இன்று இரவு நிலவரப்படி இலவச தரிசனத்திற்கு சுமார் 50 மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 300 ரூபாய் தரிசனத்திற்கு 5 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன்கள் வாங்கிய பக்தர்கள், திருப்பதியில் இருந்து பாதயாத்திரை ஆக சென்று திவ்யதர்சன டோக்கன்கள் வாங்கிய பக்தர்கள் ஆகியோர் இலவச தரிசனத்திற்காக சுமார் ஆறு மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
காத்திருக்கும் பொதுமக்கள்
இந்த நிலையில் ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவை இல்லாமல் திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு உள்ள இரண்டு வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் உள்ள அனைத்து அறைகளிலும் நிரம்பி சாமி தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 8 கிலோமீட்டர் நீள வரிசையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே காத்து உள்ளனர்.
காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு , குடிநீர் , டீ, காபி போன்ற தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகின்றது மேலும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அதை கருத்தில் கொண்டு பக்தர்கள் தாங்கள் திருப்பதி பயணத் திட்டத்தை வகுத்து கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் வரிசையில் பொறுமையாக காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.