திருச்சியில் இன்று திமுக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - என்ன அறிவிப்பு விடப்போகிறார் ஸ்டாலின்?
திருச்சி சிறுகனூரில் இன்று திமுக சார்பில் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்திற்கான 10 ஆண்டுகள் தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்க இருக்கிறார். திமுகவின் 14 வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனையடுத்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநில மாநாடு பொதுக்கூட்டமாக தற்போது அது மாற்றப்பட்டிருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்டமாக சுமார் 750 ஏக்கரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 400 ஏக்கர் வாகனம் நிறுத்தவும், 350 ஏக்கர் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சுமார் 2.5 லட்சம் தொண்டர்கள் அமர இருக்கைகளும் உள்ளன. மூன்று பிரம்மாண்ட மேடைகள் அருகருகே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றவும் நடந்து சென்று தொண்டர்களிடம் பேசவும் நீண்ட நடைமேடை அமைக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரு மேடைகளில் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அமரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக மற்றும் காங்கிரஸ்க்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை சற்றுமுன் முடிந்துள்ளது. இந்நிலையில் 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வரும் மு.க.ஸ்டாலின் 1 மணிக்கு மாநாடு நுழைவாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைக்கிறார்.
அதன் பின்பு மாலையில் 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரும் ஸ்டாலின் 'விடியலுக்கான முழக்கம்' உறுதிமொழிகள் குறித்தும் தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் அறிவிக்க உள்ளார்.