15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூர்
அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடிக்கு கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இன்று அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு கும்பங்கள் எடுத்து கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
காலை 6.22 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம் - மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாரதி தீர்த்த மகா சன்னிதானம்,
குடமுழுக்கு நிறைவு
திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சரி, முருகன் ஏன் தமிழ்க்கடவுள் தெரியுமா? முருகனின் வரலாற்றைக் குறிக்கும் ஆறுபடை தலங்களும் தமிழகத்திலேயே உள்ளன.
அவ்வையார், நக்கீரர், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களின் தமிழ்ப்பாடல்களை கேட்டு மகிழ்ந்தவர் முருகன். மேலும் ஒரு மொழிக்கு இலக்கியமும் இலக்கணமும் முக்கியம். தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் ஆபத்து வந்த போது ஓடோடி வந்தவன் முருகப் பெருமான். தமிழுக்கு ஆபத்து என்றால் முருகப் பெருமான் உடனே ஓடிவருவான். அதனாலேயே அவன் தமிழ்க் கடவுள் என அழைக்கப்படுகிறான்.