திலகர் விருது வழங்கிய அறக்கட்டளை - தலை குனிந்து வணங்கி ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி
புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு திலகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு திலகர் விருது
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இயங்கி வரும் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் நினைவு அறக்கட்டளை சுயசார்பு இந்தியா மற்றும் தேசிய உணர்வை எழுப்பியதற்காக பிரதமர் மோடிக்கு திலகர் விருது அறிவித்தது.
இதற்கான நிகழ்ச்சி புனேவில் நடைபெற்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திரஃபட்னவிஸ் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
பால கங்காதர திலகரின் 103 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பிரதமர் மோடிக்கு திலகர் விருது வழங்கப்பட்டது.
திலகருக்கு புகழாரம் சூட்டிய மோடி
பின்னர் மேடையில் பேசிய பிரதமர் மோடி, விருது பெற்றது தனது வாழ்வில் மறக்கமுடியாத தருணம் என்றார். இளைஞர்களிடம் இருக்கும் திறமையை கண்டறிவதில் திலகர் சிறந்த திறமை கொண்டிருந்தார் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும் திலகர் விருதில் தமக்கு கிடைக்கும் பணத்தை கங்கை தூய்மை திட்டத்துக்கு அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, திலகரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் புனே மேட்ரோ ரயில் சேவையின் முதல் கட்ட பணிகளை மோடி தொடங்கிவைத்தார்.