துணிவு, வாரிசு திரைப்படங்களை இணையத்தில் வெளியிடத் தடை - உயர்நீதிமன்றம்
துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இணையத்தில் வெளியிட தடை
வாரிசு திரைப்படத்தை வெளியிட 4,548 இணையதளங்களுக்கும், துணிவு திரைப்படத்தை வெளியிட 2,754 இணையதளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களையும் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பிலும், விநியோகஸ்தர்கள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் பெரும் பொருட்செலவில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
பெரும் நஷ்டம் ஏற்படுவதாக குமுறல்
இரண்டு திரைப்படங்களையும் ஓடிடி தளத்தில் வெளியிட ரூ. 65 கோடி கொடுத்து இணைய உரிமையை பெற்றுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெரும் பொருட்செலவில் இரண்டு படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதால் சட்டவிரோதமாக வெளியிடும் போது நஷ்டம் ஏற்படுகிறது என்று அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இதை கேட்டுக்கொண்ட நீதிபதி இந்த இரண்டு திரைப்படங்களையும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.