ஈரோட்டில் வாக்குப்பதிவை நிறுத்தி தர்ணாவில் ஈடுபட்ட தோப்பு வெங்கடாச்சலம் - பரபரப்பு சம்பவம்
ஈரோடு பெருந்துறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் வரிசையை மாற்றி வைத்துள்ளதாக புகார் தெரிவித்து தோப்பு வெங்கடாச்சலம், வாக்குபதிவை நிறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாக வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் மக்கள் சிரமமின்று வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், ஈரோடு பெருந்துறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் வரிசையை மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக சுயேச்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் அவர், வாக்குபதிவை நிறுத்தி, வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.