வந்தே மாதரம் பாடல் சர்ச்சை... முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – திருமாவளவன் காட்டம்!
முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் முதலில், தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாக ஒலித்ததை விசிக தலைவர் தொல் திருமாவளவன் கண்டித்துள்ளதுடன், முதலமைச்சர் விஜய் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பிடித்து தனி பெரும் கட்சியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது.

அதனை தொடர்ந்து காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல், ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிருபித்து இன்று விஜய் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று (10ஆம் தேதி) நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், ஆளுநர் அர்லேகர் தமிழக முதல்வராக விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். விஜயை தொடர்ந்து 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் முடிவிலும் முதலில் வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.
குறித்த விடயம் தற்போது, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் கடுமையாக கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு வழங்பகியுள்ள விசிக தலைவர் தொல் திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரும் இதனைக் கடுமையாக கண்டித்துள்ளார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் குறிப்பிடுகையில், தமிழ்நாட்டு அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதே வழக்கம்.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் பாடுவதே நீண்ட கால நடைமுறை. ஆனால், முதலமைச்சர், இடைக்கால சபாநாயகர் பதவியேற்பில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது. மதச்சார்பற்ற அரசியலை விரும்புவோர் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்குரிய விளக்கத்தை முதலமைச்சர் விஜய் கூற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.