எந்த சூழலிலும் தவெக ஆட்சி கவிழ விசிக இடம் கொடுக்காது - திருமாவளவன் உறுதி!
எந்தவொரு சூழ்நிலையிலும் தவெக (TVK) ஆட்சி கவிழ்வதற்கு விசிக (VCK) இடமளிக்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் தவெக தலைவர் தங்களை நம்பி இந்த ஆட்சியை திறம்பட நடத்த வேண்டும் எனவும், விமர்சனங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் அவர்கள் செயல்படக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நான்கு நபர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இது குதிரை பேரம் என அதிமுக கடுமையாக விமர்சித்தது.
இது தொடர்பில், திருமாவளவன் பேசுகையில், இதனை ஆரோக்கியமான அரசியலாக விசிக கருதவில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், இடதுசாரிகளுடன் சேர்ந்து விசிக ஆதரவு முடிவை எடுத்தது. பின்னர் கலந்து ஆலோசித்து, அமைச்சரவையில் இடம் பெறுவது என முடிவெடுத்தோம்.

எந்த நேரத்திலும், உங்கள் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம் எனும் உத்தரவாதத்தை விசிக சார்பில், தவெக தலைவருக்கும், முன்னணி பொறுப்பாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
எனினும் விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் தவெக தலைமை செயல்படக்கூடாது என்பது எங்களின் விருப்பம் என குறிப்பிட்டுள்ளார்.