முதல் தொகுதி - திருவள்ளூர் யாருக்கு? முந்துகிறாரா காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில்
திருவள்ளூரில் காங்கிரஸ் - தேமுதிக - பாஜக - நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
திருவள்ளூர் தொகுதி
தமிழகத்தின் முதலாவது மக்களவை தொகுதியான திருவள்ளூர் மக்களவை தொகுதியில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், ஆவடி, பூந்தமல்லி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டமன்ற தொகுதிகளும் முழுவதுமாக திமுக கூட்டணியிடமே உள்ளது.
பொன்னேரி காங்கிரஸ் வசம் இருக்கும் நிலையில், மற்ற 5 தொகுதிகளை திமுக தன் வசம் வைத்துள்ளது. 2009, 2014-ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுகவின் பி.வேணுகோபால் வெற்றி பெற்ற நிலையில், 2019-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் நின்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.
இம்முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ் சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, பாஜக வேட்பாளர் பாலகணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர் என மொத்தமாக 14 பேர் போட்டியிடுகிறார்கள்.
களம் யாருக்கு..?
இவர்களில் முந்துவதாக தற்போது வரை கருத்துக்கணிப்புகளில் கணிக்கப்படுபவர் சசிகாந்த் செந்தில் தான். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவருக்கு திமுகவின் பலம் கிட்டும் என்றே தெரிகிறது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நல்லதம்பி அதிமுக வாக்குகளையும், திமுக அதிருப்தி வாக்குகளையும், தேமுதிகவின் அனுதாப வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. ஆனால், அது வெற்றிக்கு போதுமானதா..? என்பது கேள்விக்குறியான ஒன்றே.
பாமகவின் வாக்கு வங்கி பாஜகவின் பாலகணபதிக்கு சற்று உதவலாம். கடந்த காலங்களில் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் 20-25% வாக்குகளை பெற்றிருக்கும் நிலையில், அந்த வாக்குகளையும், பாஜக - மோடி அலை போன்றவற்றை குறிவைத்து பாலகணபதி களம் கண்டுள்ளார்.