திருப்பதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மாயம்..அதிர்ச்சியில் அதிகாரிகள்
திருப்பதியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர்களில் 1049 பேர் மாயமானதால் அதிர்ச்சியில் அதிகாரிகள்.
கடந்த மார்ச் மாதம் துவங்கி தற்போது வரை திருப்பதியில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களில் பொதுமக்கள் செய்துகொண்ட சோதனைகளில் 9 ஆயிரத்து 164 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உரிய சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.திருப்பதியில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களில் 845 பேர் வெளியூர்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
பரிசோதனை சமயத்தில் அவர்கள் கொடுத்த தொலைபேசி எண், விலாசம் ஆகியவற்றின் அடிப்படையில் 845 பேர் வெளியூர்களில் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் உறுதி செய்தனர்.எனவே அதன் அடிப்படையில் அந்தந்த பகுதியில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு திருப்பதியில் இருந்து தகவல்கள் அனுப்பப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக திருப்பதியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனாஉறுதி செய்யப்பட்ட நபர்களில் 1049 பேர் மாயமாகிவிட்டனர்.அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பரிசோதனை சமயத்தில் அவர்கள் அளித்த முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து மாயமான ஆயிரத்து 49 பேரையும் கண்டுபிடிக்க முயன்றனர்.
அப்போது அவர்கள் கொடுத்த தொலைபேசி எண், முகவரி ஆகியவை போலியானவை என்று தெரிய வந்தது. எனவே தற்போதைய நிலையில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள இயலாத நிலை நீடித்து வருகிறது. தினமும் சாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். எனவே தொற்று ஏற்பட்டு மாயமாகிவிட்ட ஆயிரத்து 49 பேரும் திருப்பதியில் உலவி கொண்டிருந்தாள் அவர்கள் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கும் கொரோனா பரவி, பின்னர் நாடு முழுவதும் வேகமாக தொற்று பரவும் அபாயம் இதனால் ஏற்பட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர் வெளியில் நடமாடினால் அவர் மூலம் 500 பேருக்கு தொற்று பரவும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.இதனால் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் தொற்று ஏற்பட்டு நாடு முழுவதும் தொற்றின் பரவல் வேகம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலைவீச்சு தீவிரமடைந்துள்ள தற்போதைய நிலையில், திருப்பதியில் மாயமான 1049 கரோனா நோயாளிகள் இன்னும் எத்தனை ஆயிரம் பேருக்கு நோய் தொற்றை பரப்புவார்களோ என்ற அச்சத்தில் இருக்கும் அதிகாரிகள் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. இந்த தகவலை அறிந்த உள்ளூர் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.