வினோத திருட்டு - மனைவிக்கு உடம்பு சரியில்ல உருக்கமாக கடிதம் எழுதிய திருடன்

Thoothukudi
By Karthikraja Jul 03, 2024 01:30 PM GMT
Report

 திருச்செந்தூரில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு திருடி சென்றுள்ளார்.

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் சித்திரை செல்வின். தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் இருக்கிறார்கள். அனைவருக்குமே திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்தினருடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள். 

thiruchendur police station

இந்நிலையில், அவரின் மகனுக்கு குழந்தை பிறந்துள்ளதால், குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 17ம் தேதி சித்திரை செல்வின் மனைவியுடன் சென்னை சென்றிருக்கிறார். அப்போது வீட்டை பராமரிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் வீட்டுச் சாவியை கொடுத்துள்ளார். நேற்று மாலை வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வந்த செல்வி, வீட்டின் கதவுகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடிதம்

தகவலறிந்து மெஞ்ஞானபுரம் போலீசார், சித்திரை செல்வினை செல்போனில் தொடர்பு கொண்டு பீரோ லாக்கரில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் பண விவரங்களை கேட்டனர். அப்போது, பீரோவில் வைத்திருந்த ரூபாய் 60 ஆயிரம் ரொக்க பணம், ஒன்றரை பவுன் எடை கொண்ட இரண்டு ஜோடி தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது. 

மேலும், திருடன் எழுதிய கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த கடிதத்தில், என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பித் தந்து விடுகிறேன். என் வீட்டில் (மனைவிக்கு) உடம்பு சரியில்லை அதனால் தான்’ என உருக்கமாக பச்சை நிற மையில் எழுதி வைத்து விட்டு சென்று இருக்கிறான் அந்தத் திருடன்.

thiruchendur thief letter

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த கடிதத்தில் உள்ள கைரேகையையும் பதிவு செய்து உள்ளனர். இந்த திருட்டை விட திருடன் எழுதிய கடித்தை பற்றியே அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.