என் கருத்தியல் தலைமைத்துவத்தை சிதைக்க முயற்சி - திருமாவளவன் குற்றச்சாட்டு
விசிக தலைவர் திருமாவளவன், தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோயிலுக்குச் சென்று வழிபடவில்லை என்றும், தனது கருத்தியல் அடிப்படையிலான தலைமைத்துவத்தை சிதைக்கும் நோக்கில் சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் ஆகஸ்ட் 17 நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற மண்டல செயற்குழு கூட்டத்தில் பேசிய போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், திமுகவுடன் இணைந்து செயல்படுவது குறித்து மட்டுமே தேவையற்ற விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

பாஜக மீது வெறுப்பு இல்லை
மேலும், திராவிடக் கட்சிகளை அரசியலில் இருந்து ஒதுக்க முயற்சிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பாஜக மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை, கருத்தியல் ரீதியிலான வேறுபாடே இருப்பதாக கூறிய அவர், தனது பிறந்தநாளையொட்டி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மாநில அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேசிய அளவில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன; அதுபோல் தமிழ்நாட்டிலும் அரசியல் ஒத்துழைப்பு இருக்கலாம் என திருமாவளவன் தெரிவித்தார்.