மாநில அரசிற்கு கட்டுப்பட்டவர்தான் கவர்னர் : கொந்தளித்த திருமாவளவன்
மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என வி.சி.க தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேலூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
திருமாவளவன்
10 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையை தகர்க்க கூடிய ஒன்று. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இருக்கின்றோம்.
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர் கவர்னர். மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தான் கவர்னர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
கவர்னர் கட்டுப்பட்டவர்
மத்திய, மாநில அரசுகளுக்கு இடைவெளி ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக இணைப்பு பாலமாக இருக்க வேண்டியவர் கவர்னர். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் கவர்னரே தவிர, கவர்னர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டதல்ல மாநில அரசு.

இதை உணராமல் தமிழ்நாடு கவர்னர் மட்டுமல்ல. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து கவர்னர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருகின்றனர். அ.தி.மு.க.வை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் அவர் சரியாக அரசியல் செய்கிறார் என்று அர்த்தம்.
ஆனால் பா.ஜ.க.வை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது என்று அவர் கூறினால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் குரலாகத்தான் பேசுகிறார் என்று கருத வேண்டி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை கரைய விட்டு விட்டார். கைவிட்டு விட்டார் என்று எண்ண தோன்றுவதாக கூறினார்