அதிமுக வென்றால் மோடி தான் முதல்வர், அமித் ஷா தான் துணை முதல்வர் - திருமாவளவன்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. சரியாக ஒரு வாரமே மீதம் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட திமுக, அதிமுகவின் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு திமுக கூட்டணியின் மிக முக்கியமான தலைவராக திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினால் மோடியை முதல்வராக்குவதாகவே பொருள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாபநாசத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினால் மோடியை முதல்வராக்குவதாகவே பொருள். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் அல்ல, அமித்ஷா தான் துணை முதல்வர் என விமர்சித்துள்ளார்.
மேலும் பாஜக, அதிமுக பற்றி மக்கள் நீதி மய்யம், நா.த.க., அமமுக உள்ளிட்ட கட்சிகள் பேசுவதே கிடையாது என்றும் குற்றசாட்டியுள்ளார்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.