பாஜகவின் கவலையே அதுதான்; திமுக கூட்டணியில் எந்த கட்சியும் வெளியேறாது - திருமா உறுதி
திமுக கூட்டணியில் எந்த கட்சியும் வெளியேறாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இதனால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு பண்படுத்தப்பட்ட மண். முருக பக்தர்களாக இருந்தாலும், அவர்கள் மதச்சார்பற்றவர்களாக தான் இருப்பார்கள். தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்ட முடியாது.
திருமா உறுதி
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதலாக இடம் கேட்போம். யாரும் 6 தொகுதிகள் போதும் என்று சொல்லப் போவதில்லை. அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசிக்கும் போது, வெற்றியை கருத்தில் கொண்டு சூழலை புரிந்து கொண்டு முடிவு எடுப்போம்.
நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருப்போம். எல்.முருகனின் கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காக சொல்லப்பட்டது. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. பாஜகவை பொறுத்தவரை திமுக கூட்டணியை சிதறடிக்க முடியவில்லை என்ற கவலை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.